செவ்வாய், 3 மார்ச், 2009

'அங்காடித்தெரு' சொல்லும் கதை



தோற்றுப்போன ஒருவனின் வாழ்க்கையை வெயிலாய் சித்தரித்து அதில் வெற்றியை கண்டவர் வசந்தபாலன் இவர் இயக்கி வரும் அங்காடித்தெரு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'அங்காடித்தெரு' சொல்லும் கதை என்ன என்று இயக்குனரிடம் கேட்டோம்.


"நாம் தினசரி சந்திக்கிற மனிதர்கள்தான் இந்தக் கதையின் நாயகர்கள். அவர்களை நாம் நின்னு கவனிச்சதே இல்லை. சந்தையில் குண்டூசி விற்கும் கடையில் இருந்து குக்கர், தங்கம் விற்கும் கடைவரை தொழிலாளர்கள் நிறைந்து நிற்கிறாங்க. கம்பெனி யூனிபார்மும் ரெடிமேட் சிரிப்புமா நம்மை வரவேற்கிற அவர்களின் முகங்களை பட்டுப்புடவை, நகை தாண்டி நாம என்றைக்காவது ஏறெடுத்துக் கவனிச்சிருக்கோமோ நியான் விளக்கு வெளிச்சத்துக்குப் பின்னால் இருக்கும் இருட்டு நமக்குத் தெரிவதே இல்லை. இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிஞ்சுகிட்டப்ப, எனக்கு ஆச்சர்யம் அந்த ஆச்சர்யத்தை, அனுபவத்தை 500 மணி நேரம் பதிவு செஞ்சேன். அழுக்கும், வியர்வையும் கலந்த அவர்களின் உலகத்தில் காதல், நட்பு, துரோகம், வலி, ஆச்சர்யம், நகைச்சுவை, சுவாரஸ்யம் எல்லாமே இருக்கு. ஒரு ஃபேண்டஸி கதைக்குத் தேவையான சூனியக்காரிகளும், ஆக்ஷன் படங்களுக்குத் தேவையான முரட்டு வில்லன்களும்கூட அவங்களுக்குள்ள ஒளிஞ்சுகிட்டு இருக்காங்க. வழக்கமான நடிகர்கள் இந்த கேரக்டரில் நடிக்க முடியும்னாலும், கதையின் உண்மைத்தன்மைக்குப் பக்கத்தில் ரசிகர்களைக் கொண்டு செல்ல பெரும்பாலும் புதுமுகங்களைப் பயன்படுத்தியிருக்கேன். மகேஷ், புது ஹீரோ, கற்றது தமிழ் அஞ்சலி, இதில் ஹீரோயின்.

அங்காடித் தெருவில் அழகான காதலும் இருக்கு. ஆனா, அந்தக் காதல் ஒரு கால்வாய் மாதிரிதான். அந்தக் காதல் தொட்டுச் செல்லும் கரைகள் உங்களை ஆச்சர்யப்படுத்தும்.

கற்றது தமிழ் பார்த்து ஈர்க்கப்பட்டுதான் அஞ்சலியை தேடிப் பிடிச்சேன். எப்பவும் அவர் கண்களில் எட்டிப் பார்க்கும் அந்த மென் சோகம் இந்தக் கதைக்குத் தேவையா இருந்தது. அஞ்சலியின் மொத்தத் திறமையும் இந்தப் படத்தில் தெரியும். பொரி வியாபாரம் பண்ணுகிற சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர் மகேஷ். சினிமாவுக்கு ஏத்த மாதிரி தன்னை வளர்த்துக்கிட்டார். சில நேரங்களில் இயலாமை வடியும் அவரது வெறும் முகம் மட்டுமே காட்சிகளுக்குப் போதுமானதா இருந்தது. இவங்க கேரக்டர்களான ஜோதிலிங்கம், சேர்மக்கனி இருவரின் காதலிலும் சென்ட், ஃபேஸ் கிரீம் வாசனை இல்லை. லைஃப் ஸ்டைல், ஸ்பென்சர்ஸ், குளோபஸ், பல்சர் பைக், செல்போன், மகாபலிபுரமும் இல்லை. இவர்களின் காதல் வலியில் பிறந்து, வேதனைப் பகிர்தலில் பூக்கிறது. கண்ணீரைத் துடைக்கும்போது அழகாகிறது. படம் பார்த்தபின்னாடி தெருக்களின் இரைச்சல்கூட உங்களுக்கு வாழ்வின் அர்த்தங்களைச் சொல்லும். புதுமுக நடிகர்கள், நடிப்பு பயிற்சி, படப்பிடிப்பு விபத்துக்கள், காட்சிப்படுத்துவதற்கான மெனக்கெடல்கள்னு பல காரணங்களால் கொஞ்சம் தாமதமானாலும், தரமான சினிமாவாக வந்திருப்பதில் எனக்குத் திருப்தி" என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக