
'வேட்டைக்காரன்' தலைப்பு வச்சிருக்காங்களே நல்ல கதை சிக்கியிருக்குமோ! என்ற சந்தேகம்கூட எழாமல், விஜய்யின் படம் இப்படித்தான் இருக்கும் என தியேட்டருக்குள் நுழைபவர்களின் நம்பிக்கையை கொஞ்சமும் சிதைக்காமல் காப்பாற்றியுள்ளார் இயக்குனர் பாபுசிவன்.
படிப்பிற்காகவும், பிழைப்பிற்காகவும் சென்னை வரும் நாயகனுக்கும் வில்லனுக்கும் ஏழரை பாலம் போடுவது, க்ளைமாக்ஸில் ஹீரோவுக்கு ஜெயம் கைக்குலுக்குவது என்ற பழைய பஸ் டிக்கெட்டில் எழுதிய கதையே இஸ்திரி போட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் படிக்கும் ப்ளஸ் டூ ஸ்டுடண்டுதான் விஜய். என்னது ப்ளஸ் டூ ஸ்டுடாண்டான்னு? ஆடியன்ஸ் அதிர்ச்சியாகிடக்கூடாது என்பதற்காக பல வருஷமா பரிட்சையில தேறாதவ்ர்ன்னு இயக்குனர் பிடிச்சிருக்காரு பாருங்க ஒரு லாஜிக், என்னத்த சொல்றது.. சரி அத விடுங்க! விஜய் நடிப்பு ? அதே டான்ஸ், ஒரேவிதமான டயலாக் டெலிவரி, ஜீன்ஸ் பேண்டின் தூசு தட்டி வில்லனுக்கு சேவல் ஸாரி சவால் விடுவது, வில்லன்கிட்ட பேசி தொண்டைதண்ணி வற்றிய நேரம் பார்த்து நாயகியுடன் சேர்ந்து, ரொமான்ஸ்,டூயட் என ரீலை வளர்க்க உதவுவது. ம்ஹூம் விஜய் மாறவேயில்லை.
படிக்கவந்த மகனுக்கு ஊரிலிருந்து ஒரு போன் போட்டுக்கூட நலம் விசாரிக்காத விஜய் பெற்றோரின் அக்கறை, திரைக்கதையிலும் தேடவேண்டியுள்ளது. எண்கவுண்டரில் போட்டுத்தள்ள அழைத்துச்செல்லும் போலீஸிடமிருந்து தப்பிக்கும் விஜய், மெட்ராஸ் எல்லையில்தான் குதிக்கிறார் ஆனா திடீர்னு பெரிய அருவி ஒண்ணு வருது பாருங்க, அரசாங்கம் நினைச்சாலும் அப்படியொரு லொக்கேஷனை சென்னைக்கு கொண்டுவரமுடியாதுங்கோ.
தூத்துக்குடி, சாத்துக்குடின்னு நாயகி கேரக்டருக்கு அனுஷ்காவை பிழிந்தெடுத்திருக்கின்றனர். 'புலி உறுமுது...', 'நான் அடிச்சா தாங்கமாட்ட.' பாடலை தவிர மற்ற மூன்று பாடல்களும் சில நிமிட டாக்கி போர்ஷன்களும் அனுஷ்காவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வில்லன்கனின் முகத்தை அடிக்கடி காட்டி பயமுறுத்துவதற்கு பதில், அனுஷ்காவின் க்ளோசப்பிற்கு எக்ஸ்ட்ரா சீன்கள் வைத்திருக்கலாம்.
விஜய்யின் கல்லூரி நண்பராக வருபவரின் காமெடி செம 'ஸார்ப்' . விஜய்க்காக ஊரிலிருந்து கிளம்பிவரும் நண்பர்கள் எபிசோடிலும் லாஜிக், சத்யனின் மனைவி கேரக்டர் போல அனாதயாக நிற்கிறது. ஒன்றுக்கு இரண்டு வில்லன்கள், விஜய்யின் ஆக்ஷன் அவதாரத்திற்கு கைக்கொடுக்கிறது. மற்றபடி அவர்களிடமும் பார்த்து சலித்த நடிப்புதான் எட்டிப்பார்க்கிறது.
விஜய் ஆண்டனியின் பின்னணி இசையில் போகி பண்டிகையின் டம டம. இது விஜய் படம், இயக்குனர் பாபுசிவன் தெரியவில்லை.
வேட்டைக்காரனிடம் மாட்டியது மக்கள்தான்.